திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா

வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மக்களே,

நேற்று திருநெல்வேலி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. சரி, ரொம்ப நாளா இந்த திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா என்று கேள்விப் பட்டுக்கொண்டு வருகிறோம், அதனை இந்த முறை நேரில் சென்று சுவை பார்த்து விடலாம் என்று முடிவு செய்தவாறே திருநெல்வேலியை சென்றடைந்தேன். பின்னர் அங்கு விசாரித்தபோது தான் தெரிய வந்தது, இருட்டுக்கடை அல்வா விற்கும் கடை மாலை ஆறு மணிக்கு தான் திறப்பார்கள் என்று.

சரி, கடை எங்குதான் இருக்கிறது என்று விசாரித்து வைத்துக் கொண்டேன். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் எதிரில் இந்த இருட்டுக்கடை அல்வா விற்கும் கடை உள்ளது. இந்த கடைக்கு பெயர் எதுவும் கிடையாது. அதேபோல விற்பனை நேரமும் மாறுவதில்லை. கடையின் பெயர்பலகை கூட கிடையாதாம். சரி, என்று நினைத்துக் கொண்டு திருநெல்வேலியில் உள்ள நண்பரை சந்திக்க தொலைபேசியில் அழைத்தால் அவர் மதிய உணவுக்கு அழைத்தார். உணவு உண்டுவிட்டு வரும் போது மணி நான்கு முப்பது. அப்போது என்னுடைய கார் சென்ற தெருவை பார்த்தால் அதுதான் நெல்லையப்பர் கோவில் இருக்கும் தெருவாம். சரி, நம்முடைய இருட்டுக்கடை அல்வா விற்கும் கடையை பார்க்கலாம் என்று பார்த்தால், அங்கே ஒரு கூட்டம் வரிசையில் நின்றுக் கொண்டு இருந்தது.

DSC01329  DSC01330

அது சரி, இப்போதே இந்த கூட்டமா? அப்படியானால், மாலை ஆறு மணிக்கு கடை திறக்கும்போது எப்படி இருக்குமோ? என்று எண்ணி என்னுடய கார் டிரைவரை விசாரித்தேன். அப்போது அவர், "சார், கூட்டம் அலைமோதும், அதனால் வாங்குவது சற்று கடினம்தான்" என்று கூறினார். என்னுடைய நண்பர்களும். மனைவிகளும் (அதாவது நண்பர்களின் மனைவிகளும்) திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா இல்லாமல் சிங்கார சென்னைக்கு வரக்கூடாது என்று உத்தரவு போட்டு இருந்ததால் என்ன செய்வது என்று நொந்துக் கொண்டே என்னுடைய அறைக்கு வந்து சேர்ந்தேன்.

அப்போது நான் தங்கி இருந்த ஹோட்டலின் முதலாளி ஒரு ஐடியா சொன்னார். அதாவது பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு அல்வா கடை இருக்கிறது. அது ஊருக்கு புதிதாக வருபவர்களை ஏமாற்றவே, கடையின் பெயரையே "திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா" என்று செயல்பட்டுக் கொண்டு வருகிறது. நீங்கள் வேண்டும் என்றால் அங்கே வாங்கி உங்கள் நண்பர்களுக்கு கொடுத்தால் நீங்களும் கொடுத்த வாக்கை மீறாமல் இருக்கலாம் அல்லவா என்று கூறினார். அவர் சொல்வதும் சரிதான் என்று நினைத்துக் கொண்டேன். நான் இருட்டுக்கடை அல்வா வாங்கி வருவதாக தானே சொன்னேன்? இப்போது இங்கே வாங்கினால் அதில் தவறேதும் இல்லை என்று நினைத்துக் கொண்டு வாங்கினேன். ஒரு கிலோ அல்வா என்பது ரூபாயாம். அதனை நன்றாக பேக் செய்து தருகிறார்கள். நானும் நான்கு ஐந்து கிலோ வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.

DSC01331 DSC01332

கிளம்பியவுடன், நண்பருக்கு தொலைபேசியில் அழைத்து கிளம்பியதாக கூறினேன். அவர், நீங்கள் ஊரை விட்டு செல்லும் வழி என்னுடைய வீட்டு வழிதான். என்றார். அவரிடம் இந்த இருட்டுக் கடை அல்வா பற்றி கூறினேன். சிரித்து கொண்டே, நீங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்றார். அவர் வீடு அந்த ஒரிஜினல் இருட்டுக்கடை அல்வா கடை அருகில் இருந்ததால் நானும் அங்கு சென்றேன். சென்றால், நண்பர் வரிசையில் நின்றுக் கொண்டு இருந்தார். அதனால் அவரிடம் ஒரு கிலோ வாங்க சொன்னேன். அவரும் வாங்கி தந்தார். ஒரு கிலோ அல்வா ருபாய் நூற்றி இருபது ஆகும். விலை சற்று அதிகமாக இருந்தாலும் சுவை அந்த அல்வாவைவிட பன்மடங்கு அதிகம் ஆக இருந்தது. நண்பருக்கு நன்றி கூறி, ஒரு கிலோ ஒரிஜினல் இருட்டுக் கடை அல்வா பிளஸ் ஐந்து கிலோ போலி இருட்டுக்கடை அல்வாவுடன் இன்று சென்னைக்கு வந்து சேர்ந்தேன்.

DSC01333 DSC01334

எனக்கு இதுவரையில் அல்வா கொடுத்த பல நண்பர்களுக்கு நான் இன்று அல்வா கொடுத்து விட்டேன். அதனால் முதன் முறையாக திருநெல்வேலி செல்லும் அன்பர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும். போலி இருடுக்கடையில் சென்று ஏமாந்து விடாதீர்கள்.

(அப்பாடா, ரொம்ப நாளா மக்களுக்கு பயனுள்ள ஒரு பதிவாவது போட எண்ணி இருந்தேன், இன்று செய்து விட்டேன். அதில் அனைவருக்கும் ஒரு மெஸ்சேஜ் வேறு சொல்லி விட்டேன்).

Comments

17 Responses to "திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா"

Mrs.Faizakader said... January 8, 2010 3:46 PM

புதுசா போறவங்க உங்களை போல் தான் பல பேர் ஏமாரந்தது போறாங்க..

Shankar said... January 8, 2010 3:50 PM

நன்றி நண்பரே! நல்ல தகவல்! நானும் திருநெல்வேலி பக்கம்தான். ராஜபாளையம்..... (ஹி. ஹி. ஹி .. எதுக்கு பேமஸ் தெரியுமா)

வேண்டப்பட்ட விரோதி said... January 8, 2010 10:31 PM

ஐயா நட்பின் சிகரமே

அல்வா விஷயத்திலேயே உங்கள் நண்பர்களுக்கு ’அல்வா’ கொடுத்து வரலாறு படைத்து விட்டீர்கள். இன்னுமா உங்களை நண்பர்கள் நம்புகிறார்கள்?

இருட்டு கடையில் வாங்கி வரச் சொன்னால் புரட்டு கடையில் வாங்கி வந்த உங்கள் திருட்டுத் தனத்தை என்னவென்று சொல்வது? உங்களது புரட்டுகதையை முரட்டுத்தனமாய் நம்பும் உங்கள் அசட்டு நண்பர்களுக்கு உண்மை தெரிந்து ஒரு நாள் உங்கள் வீட்டிற்கு வருவார்கள் உருட்டு கட்டையோடு!

அண்ணாமலையான் said... January 9, 2010 3:05 PM

பாவம் நன்பர்கள்....

kailash,hyderabad said... January 9, 2010 3:39 PM

முன்பு எனக்கு நண்பர் ஒருவர் (குற்றாலத்துகாரர் ) அல்வா வாங்கிட்டு வந்து கொடுத்தார் .சுமாராத்தான் இருந்தது .இப்படித்தான் அல்வா கொடுத்திருப்பரோ !

மதார் said... January 9, 2010 4:01 PM

போன வாரந்தான் நானும் இதே போலி கடையில் அல்வா வாங்கினேன் . வேற என்ன பண்ண நமக்கு ஊருக்கு போனா டைம் சரியாய் இருக்கு , இதுல எங்க போய் ஒரிஜினல் அல்வா வாங்குறது ? இருந்தாலும் இதுவரிக்கும் அல்வா இல்லாம வந்தது இல்ல . திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருக்கும் ஆர்யாஸ் பேக்கரி அல்வா சுவை இந்த போலி கடையை விட நல்லா இருக்கும் .

ஒருமுறை அல்வா வாங்கி வந்த எனக்கே திருநெல்வேலி ஆளு ஒருத்தர் அல்வா குடுத்துட்டார் . என் சோக கதை விரைவில் ...........

கண்ணா.. said... January 9, 2010 7:06 PM

எங்க ஊர் அல்வாவை பற்றி ஓரு பதிவாஆஆஆஆ..

அதே போல் நெல்லையில் சாந்தி அல்வாவும் பேமஸ் ( சாந்தி யாருக்கு அல்வா குடுத்தான்னு கேக்கபடாது..) அதே பெயரிலும் பல போலிகள்

திருநெல்வேலியில் பெயர் பஞ்சம் வந்திடுச்சோ.....

K.S.Muthubalakrishnan said... January 9, 2010 11:08 PM

In Town near irruttukadai halwa shop u can get orginal halwa shop run by them they have two shops. next time get original at any time .

வெடிகுண்டு வெங்கட் said... January 10, 2010 9:13 AM

Mrs.Faizakader
//புதுசா போறவங்க உங்களை போல் தான் பல பேர் ஏமாரந்தது போறாங்க.//

ஆமாம் மேடம். இன்னும் மக்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதனால் தான் இந்த பதிவு.

வெடிகுண்டு வெங்கட் said... January 10, 2010 9:14 AM

ஷங்கர்,

//ராஜபாளையம்..... (ஹி. ஹி. ஹி .. எதுக்கு //

நன்றாக தெரியும் நண்பரே. மிக நன்றாக தெரியும்.

வெடிகுண்டு வெங்கட் said... January 10, 2010 9:16 AM

ஐயா வேண்டப்பட்ட விரோதி,

உங்களின் எழுத்து நடையே நீங்கள் யார் என்பதை காட்டிக் கொடுத்து விட்டது. வருகைக்கு நன்றி.

வெடிகுண்டு வெங்கட் said... January 10, 2010 9:17 AM

அண்ணாமலையான் அவர்களே,

என்ன செய்வது, கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமல்லவா?

வெடிகுண்டு வெங்கட் said... January 10, 2010 9:28 AM

கைலாஷ்,

//.இப்படித்தான் அல்வா கொடுத்திருப்பரோ !//

யார் கண்டது? இருக்கலாம்.

வெடிகுண்டு வெங்கட் said... January 10, 2010 9:33 AM

மதார்,

உங்க சோக கதையை படிக்க ஆவலுடன் நான்.

இன்னமும் பலர் பாதிக்கப் படக்கூடாது என்பதாலேயே இந்த பதிவு.

வெடிகுண்டு வெங்கட் said... January 10, 2010 9:34 AM

கண்ணா,

ஆமாம் - நெல்லையில் ஷாந்தி அல்வா மற்றும் ஆர்யாஸ் பேக்கரி அல்வா நன்றாக இருந்தது.

வெடிகுண்டு வெங்கட் said... January 10, 2010 9:36 AM

முத்து பாலகிருஷ்ணன்,

தகவலுக்கு நன்றி. நான் ஏமாந்த மாதிரி யாரும் ஏமாறக் கூடாது என்றே இந்த பதிவு.

கண்ணன் said... January 10, 2010 7:31 PM

//என்னுடைய நண்பர்களும். மனைவிகளும் (அதாவது நண்பர்களின் மனைவிகளும்)//

LOL..இந்த கடைக்காரர் கோடிஸ்வரரா இருப்பார்? அல்வா கொடுத்தே..ஸாரி வித்தே?.இருட்டு கடை அல்வானு பேர் வெச்சதனால் மின்சார செலவு மிச்சம் :)

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin